‘அரசாங்கம் வியாபாரியல்ல, வருமானம் போதவில்லை, நஷ்டம் வந்துவிட்டது என்று கூறி விலையை உயர்த்தி மக்களைச் சுரண்டுவதற்கு. அத்தியாவசியப் பொருள்கள் விலைகளை உயர்த்துவது மக்களை மெல்லக் கொல்வதற்கு சமம். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போக்கை கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும்…’
-இதனை நாம் சொல்லவில்லை, பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொதித்துப் போய்ச் சொன்ன தீர்ப்பு இது.
மக்களை மெல்லக் கொல்ல ஆரம்பித்துவிட்டாரோ ஜெயலலிதா என்ற கேள்விதான் இந்த இரு தினங்களும் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகின்றன. இந்த 6 மாதங்களில் அவர் உருப்படியாக எதையுமே செய்யவில்லை. அட, செய்யாமல் போனாலும் பரவாயில்லை… இருப்பதையும் நாசமாக்கி நஷ்டத்துக்கு மேல் நஷ்டத்தையே ஏற்படுத்தி வருகிறார்.
ஆட்சிக்கு வந்த கையோடு, வழக்கம்போல திமுக அரசு கஜானாவை சுரண்டிவிட்டுப் போய்விட்டது என்ற வசதியான காரணத்தைச் சொல்லி ரூ 4000 கோடிக்கு மேல் வரிகளை உயர்த்தினார். ஆண்டுக்கு ரூ 1600 கோடிக்கு மதுபான விலைகளை உயர்த்தினார்.
இப்போது தமிழக மக்கள் இதற்கு முன்பு பார்த்தும் கேட்டும் அறியாத அளவுக்கு ஏகத்துக்கும் பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். குறிப்பாக பஸ் கட்டணம் 70 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு பஸ்களை மட்டுமே நம்பியுள்ள பெரும்பான்மை மக்கள், இனி மாற்று வாகனங்களை நாடியே தீர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
அடுத்து மின் கட்டணத்தை யூனிக்கு ரூ 1.50 அல்லது 2 வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக மின்வாரியும் அறிவித்துள்ளது.
இந்த மக்கள் விரோத செயல்கள் அனைத்துக்கும் மத்திய அரசு நிதி தரவில்லை என்றும், முந்தைய திமுக அரசு முக்கிய காரணம் என்றும் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்.
உண்மையில் மத்திய அரசு நிதியே தரவில்லையா?
இதோ இதே ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவைச் சந்தித்த பிறகு கூறியதைப் படியுங்கள்:
“பிரதமர் மற்றும் திட்டக்கமிஷன் துணைத் தலைவருடனான சந்திப்பு பயனுள்ள வரையில் இருந்தது. நான் அலுவாலியாவிடம் ரூ 20000கோடிதான் தொகுப்பு நிதியிலிருந்து கேட்டேன், ஆனால் 23467 கோடி அளித்துள்ளார்கள். மிக்க மகிழ்ச்சியைத் தரும் அறிவிப்பு இது. மத்திய அரசுக்கு நன்றி,” என்று பேசிய அதே ஜெயலலிதா வாய்தான் இப்போது மத்திய அரசைத் திட்டுகிறது!
அதாவது ஜெயலலிதா கேட்டதை விட ரூ 3467 கோடியை அதிகமாகவே கொடுத்துள்ளது மத்திய அரசு.
அடுத்து, எப்போதும் போல கண்ணை மூடிக் கொண்டு அவர் குற்றம்சாட்டுவது திமுகவை. அவர்கள் கஜானாவை துடைத்துவைத்துவிட்டார்களாம். கஜானா என்பது அவர்கள் வீட்டு பீரோவா என்ன, திறந்ததும் எடுத்துக் கொண்டு போவதற்கு?
எந்தெந்த வழிகளில் பணத்தைச் சுரண்டி திமுகவினர் எடுத்துக் கொண்டார்கள் என்பதை இப்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் ஜெயலலிதா வெளிப்படையாக சொல்லலாமே. அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாமே… யார் தடுத்தார்கள்?
இந்த விலை உயர்வு தமிழக மக்கள் அனைவர் மனதிலும் ஒரு பெரும் சவுக்கடியாய் விழுந்திருப்பதை இந்த இரு தினங்களில் நேரில் பார்க்க முடிந்தது. ஜெயலலிதா என்ன செய்தாலும் சரிதான் என ஜால்ரா அடிக்கும் ஒரு கூட்டம் வழக்கம்போல, ‘ஆஹா… ஜெயலலிதாவின் துணிச்சல் யாருக்கு வரும்’ என்று ஈனஸ்வரத்தில் முனகாமல் இல்லை.
சம்பளம் அதிகமாகிவிட்டதாம்… அதனால் இந்த விலை உயர்வு சரிதான் என்று வெட்டி நியாயம் சொல்கிறது இந்தக் கூட்டம்.
தமிழகத்தில் வேலைக்குப் போய் சம்பளம் பெறும் குடும்பம் அதிகபட்சம் 9 சதவீதம் கூட இல்லை. இதில் அரசுத் துறை பணியாளர்கள் வெறும் 2 சதவீதத்துக்கும் குறைவு. அதாவது தமிழக மக்கள் தொகையான 7.5 கோடியில் 2 சதவீதம்!
இவர்களின் வாக்குகளை மட்டுமே மனதில் கொண்டு மேலும் மேலும் சம்பளத்தை ஏற்றி வந்திருக்கிறார்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். இதன் பலன், மாநிலத்தின் மொத்த வருவாயில் 98 சதவீதம், அரசு செலவுகள், பணியாளர் சம்பளம் மற்றும் இதர வகைக்கே போய்விடுகிறது. 98 சதவீத அரசு வருவாயை அரசுப் பணி்யாளர்களை போஷிப்பதற்கே செலவிடுகிறது அரசு. எஞ்சியுள்ள 2 சதவீத வருவாய் மற்றும் புதிய கடன்களே தமிழக மக்களின் நலப் பணிகளுக்குப் போகிறது.
இந்த உண்மையைக் கூட நாம் சொல்லவில்லை. கடந்த முறை ஆட்சியிலிருந்த ஜெயலலிதா, அரசுப் பணியாளர் விழாவில் சொன்னவை.
அரசுப் பணியாளர்களுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு சம்பளத்தையும் இதர படிகளையும் உயர்த்துவது எதற்காக? ஒரு அரசுப் பணியாளருக்கு தேவைக்கும் அதிகமாகவே இன்று சம்பளம் வழங்கப்படுகிறது. மக்களிடம் வரிகளாகவும் மறைமுக வருமானங்களாகவும் சுரண்டுவதை அப்படியே அரசுப் பணியாளர்களுக்கு கொட்டுவதை நிறுத்தினாலே, பல ஆயிரம் கோடி மிச்சப்படுமே!
மக்கள் வரிப்பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்த வேண்டும். மிகக் குறைந்த ஒரு பிரிவினருக்கு மட்டுமே முழு வருமானத்தையும் செலவழித்துவிட்டு, பற்றாக்குறைக்கு கடன் வாங்கி, அந்த சுமையையும் ஏழை எளிய மக்கள் மேல் சுமத்தும் போக்கை திமுக, அதிமுக என எந்த அரசும் நிறுத்துவதாகத் தெரியவில்லை.
இந்த விலை உயர்வை சம்பளம் பெறுவோர் சமாளிக்கக் கூடும். கூலிகள், ஏதோ ஒரு தொழில் செய்து பிழைப்பை ஓட்டும் சாமானியர் எப்படிச் சமாளிப்பார்கள் என்று யோசிக்க வேண்டாமா?
இன்னொன்று, தேவையற்ற இலவசங்கள்.
ஆடு மாடுகள், லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், பேன்… இந்த ஓட்டு லஞ்சத்தை யார் கேட்டார்கள்? இந்த இலவசங்களைத் தருவதற்காக இருக்கிறவர்களை வதைப்பது ஏன்? நீதிமன்றம் மூலம் இதற்கொரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
போலீஸ்காரர்களுக்கு வருமானமில்லையா என்ன… எதற்காக அவர்களுக்கு மலிவு விலைக் கேண்டீன்கள்? இந்த தண்டச் செலவும் மக்கள் தலையில்தானே விடியும்!
பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், எந்த நேரத்திலும் செத்துப் போகும் நிலையில் இருப்பதாகவும் பிலாக்கணம் பாடியுள்ளார் ஜெயலலிதா.
இதற்கு முழுக்க முழுக்க ஆட்சியாளர்களே காரணம். பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் சோம்பேறித்தனம், மோசமான நடத்தை, யோக்கியமற்ற செயல்கள் போன்றவற்றை திமுக – அதிமுக அரசுகள் மாறி மாறி ஊக்கப்படுத்திக் கொண்டுதான் வந்துள்ளன. இந்த ஊக்கப்படுத்தல், கடைசியில் நிறுவனத்தையே விழுங்கும் அளவுக்குப் போயிருக்கிறது.
போக்குவரத்துத் துறையை சீரழித்ததில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சம பங்கு உள்ளது. 1996-97-ல் எம்ஜிஆர் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் ரூ 900 கோடி நஷ்டம். இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது, பழைய பஸ்களை சீர்படுத்தி ஓட்டுவதற்கு ஆகும் செலவு, உதிரி பாகங்கள் வாங்குவதில் அடிக்கப்படும் கொள்ளை போன்றவைதான் என்று தெரியவந்தது.
அதாவது ஒரு புதிய பஸ்ஸை வாங்கி ஓட்டுவதற்கு ஆகும் செலவை விட, பழைய பஸ்களை பராமரித்து ஓட்டும் செலவு அதிகம் என்று எம்ஜிஆர் போக்குவரத்துக் கழகத்தின் வரவு செலவை ஆராய்ந்தவர்கள் சொன்னார்கள். இருந்தும் ஏன் போக்குவரத்துக் கழகங்கள் புதிய பேருந்துக்கு மாறவில்லை? மாறிவிட்டால் எப்படி கொள்ளையடிக்க முடியும்… அதனால்தான் பழைய பஸ்களுக்கு செலவுக் கணக்குக் காட்டி, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை நஷ்டக் கணக்கு காட்ட வைக்கின்றன.
அமரர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே சிறந்த பஸ் போக்குவரத்து உள்ள மாநிலம் என தமிழகம் 3 முறை விருதுகளை வென்றது. அவர் மறைவுக்குப் பிறகு அந்த விருதை தொடர்ச்சியாகப் பெற்ற ஒரே மாநிலம் கர்நாடகம்தான்.
இன்று நாட்டின் மிகக் கேவலமான ஓட்டை உடைசல் பேருந்துகளைக் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாகத்தான் தமிழகம் திகழ்கிறது. நான்கு வழித்தடங்களில் நான்கு பேருந்துகள் இருந்தாலே ஒருவர் கோடீஸ்வரனாகிவிட முடியும். அப்படியொரு லாபகரமான வர்த்தகம் போக்குவரத்துத் துறை. ஆனால் 95 சதவீத போக்குவரத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஆட்சியாளர்கள் கூறுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?
நிர்வாகத்தைச் சீரமைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முதலில் வெட்டிச் செலவுகள், ஓட்டை பஸ்களுக்கு உதிரி பாகங்கள் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளை, லாபகரமான வழித்தடங்களில் தனியார் பஸ்கள் நன்றாக இயங்க ஒத்துழைப்பு தரும் அயோக்கிய பணியாளர்கள்… இவற்றையெல்லாம் களைந்திருந்தாலே, நிறுவனங்கள் லாபத்துக்குத் திரும்பியிருக்குமே!
இந்த விலை உயர்வு மூலம், வெளிப்பட்டிருப்பது இரண்டு விஷயங்கள்… ஒன்று ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மை. இன்னொன்று, அடித்தட்டு, கிராமப்புற மக்களைப் பற்றிய அவரது அக்கறையின்மை!

It is easy for arm chair Judges to say anything,
Running the Government on a healthy note is no easy task.
True, Jayalaithaa always cribs that Karunanidhi has emptied the coffers..but is that not a fact?
If one were to look at the Tamil Nadu state finances one would definitely agree to this step, unless of course one is conditioned by Tamil Nadu Color blind politics-either for Jayalalithaa or Karunanidhi- no mid way.
What does one want? To allow the State go bankrupt?
Those who shout about the price rise may provide a solution instead of wallowing in weepy prose.
Action is needed not dialogues.